சாட்சிகள் வைத்து
பூக்கள் பூப்பதில்லை -அது
வாடகைக்கு வாசம் சேர்ப்பதில்லை....!
வாழ்வும் புதையலாய்
மறைந்திருக்கும்-வலி
மேகத்துளிபோல் ஒளிந்திருக்கும்....!
தேடிப்பெறுவதே
நிலைத்திருக்கும்-விழி
தேடாவிடியல் இருட்டிருக்கும்....!
ஓரப்பார்வைகள்
அர்த்தமில்லை -காதல்
உள்ளத்தீயில் எரிவதில்லை......!
ஊமை மொழியில்
உயிர்ப்பிருக்கும் -இமை
தாழும் பெண்ணிலே பயிர்ப்பிருக்கும்....!
வானும் மண்மடி
காதலிக்கும்-அது
மழைத்துளியூடே பூஜிக்கும்...!
சொல்புதிது சேர்க்கும்
புதுகவிதைகள் -அவை
சுருங்கக்கூறின் சுவையாகும்....!
எல்லாக்கனவும்
பலிப்பதில்லை-உயிர்
இல்லாநினைவுகள் நிலைப்பதில்லை....!
வல்லோன் புகழை
மறந்துவிடில்-உயிர்
வாழ்தலில் என்றும் பயனில்லை.....!
ப்ரியமுடன் சீராளன்
No comments:
Post a Comment