சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

Monday 2 July 2012

இதயத்தின் இடிபாடுகள்....!




நான் தேடும் கூடுகள்
இன்னும் கட்டப்படவில்லை...
மரங்கள் மண்ணோடு
புதைந்து போனதால்............!
ஈரம் இல்லாத மண்ணும்
ஏற்கின்ற வேர்களை
மருந்திட்டு மண்ணாக்கும்
மானுட யுகத்தில்.....
நானும் வேர் விட்டு 
விழுதிறக்கினேன் ....!

கள்ளிப்பால் இட்ட காதலுக்கு
கண்ணீர்பால் இட்டு
கருவாக்க முடியாதுதான்
அப்படித்தான்.......
அணுவணுவாய். ரசித்த
அழகோவியம் அழிந்து போனது...!

இடிபாடுகள் இன்னும்
இடம் மாறவில்லை இதயத்தில்
இறப்பது கண்ணீராயினும்
சுமப்பது கண்கள் என்பதை
அறியாத இமைகளாய்
நீயிருந்து நிழலாடுகிறாய்
உயிரில் கட்டிய ஊஞ்சலில்....!

எனக்கொரு சிறகு
அறுந்ததும் ஓடினாய்....
வானம் பாடியாய் இன்று
வட்டமிடுகின்றேன்
வலிதாங்கும் விழியிருந்தால்
வந்து பார்....
முளைக்கப்பட்ட இறகுகளில்
பச்சை குத்தப்பட்டிருப்பது
என்றும் உன் அதே பெயர்தான்...!

ப்ரியமுடன் சீராளன் 

No comments: