அன்றும்
வழமைபோல்
ஆலய தரிசனம்
உனக்காய் நானும்
எனக்காய் நீயும்
வீணாக்கிய நேரங்கள்
காற்றோடு இன்றும்
அறியாப்பருவத்தின்
அர்த்தமற்ற உணர்வுகளால்
இதயத்தின் இழைகள்
இன்றுவரை ஒட்டவில்லை
வலியா,வாழ்வா
வைகறைக் கனவுகள்
சாட்சியங்களாய்...!
இறப்பிற்கு பின்னாலும்
இணைவோம் என்று
தலைமீது சத்தியம்
தவறாகப் பண்ணியதால்
மனதின் சாபத்தில்
மண்ணுக்குள்ளும் மாரடைப்பு...!
இப்போதெல்லாம்
இதயத்தில் எழுதாமல்
இமைகளில் எழுதுகிறேன்
கண்ணீரில் கரைந்துவிடும்
என்பதற்காக மட்டுமில்லை
சிந்தும் நினைவுகளை
நிலங்களாவது
உள்வாங்கட்டுமே என்று...!
வெறுமைகளை விதைத்தவன்
அறுவடைக்கு ஆசைப்பட்டால்
சிறுமை என்பதால்
எனக்குள்ளே அறுக்கின்றேன்
இன்னும் மீதமுள்ள
காதல் ரணங்களை....!
இறக்கும் போது
என் கடைசி மூச்சு
சாட்சி சொல்லும்
என் காதல் நீ என்று
காத்திருக்காதே
உன் இதயத்தை ஒட்டுக்கேள்
அது சொல்லும்
பருவம் நமக்குள் பாடிய
பால்ய ராகங்களை....!
ப்ரியமுடன் சீராளன்
1 comment:
அருமையான கவிதை... ஆழமான உணர்வு
Post a Comment